உலக அளவில் பட்டினியால் பாதிக்கப்பட்டோர் தரப்பட்டியலில் இந்தியா அச்சுறுத்தலான நிலையில்

“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி. இன்றும் ஒருவேளை உணவுக்கு வழியின்றி வறுமையில் வாடும் ஏழைகள் அதிகம். உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. இது மனித உரிமையும் கூட. பசியால் யாரும் வாடக்கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்டுதோறும் அக்.16-ம் தேதி, உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

தொடக்கம்

1945 அக்டோபர் 16 -ம் நாளன்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நாளை நினைவு கூறும் வகையில்தான் நவம்பர் 1979 – ம் ஆண்டில்  நடந்த 20-வது பொது மாநாட்டில் ஐ.நா,  உலக உணவு தினத்தை அறிவித்தது.  ஹங்கேரியின் முன்னாள் அமைச்சர் பால் ரொமானி என்பவரின் முயற்சியினால் தற்போது 192- க்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.


இந்தியாவில் உணவு நிலை

உணவுப் பாதுகாப்பில் இந்தியா பின்தங்கிய நிலையில் உள்ளது. சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட புள்ளி விவரப்படி, உலக அளவில் பட்டினியால் பாதிக்கப்பட்டோர் தரப்பட்டியலில் இந்தியா அச்சுறுத்தலான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஊட்டச்சத்து குறைபாட்டினால் மகாராஷ்டிரா மாநிலத்தின் 3 மாவட்டங்களில் கடந்த 11 மாதங்களில் 1,274 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். நந்தர்பர் மாவட்டத்தில் 662, பால்காரில் 418, தானேயில் 194 குழந்தைகள் என அதிர்ச்சி அளிக்கிறது புள்ளிவிவரங்கள். தானே மாவட்டத்தின் பிவாண்டி பகுதியில் சராசரி எடைக்கும் கீழ் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 2013-ம் ஆண்டு 286-ஆக இருந்தது.

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் 19 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் தெரிவித்துள்ளது.  உலக நாடுகளில் மற்ற எந்த நாட்டை காட்டிலும், இந்தியாவில் அதிகப்படியாக மக்கள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் பசியோடு இருக்கும் மக்களின் எண்ணிக்கையானது, 2014-15 ஆண்டில் 795 மில்லியனாக குறைந்து உள்ளது. கடந்த 1990-92-ம் ஆண்டுகளில் பட்டினியாக இருக்கும் மக்களின் எண்ணிக்கையானது ஒரு பில்லியன் ஆகும். உலகில் உணவுப் பாதுகாப்பின்மை நிலைகுறித்து (‘தி ஸ்டேட் ஆப் புட் இன்செக்யூரிட்டி இன் தி வேல்ட் 2015’ ) ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு அறிக்கை சமர்ப்பித்து உள்ளது. இந்தியாவில் பட்டினி குறைந்து உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

1990-92-ம் ஆண்டுகளில் பசியோடு இருந்த மக்களின் எண்ணிக்கை 210.1 மில்லியனாக இருந்தது. தற்போது 2014-15ல் 194.6 மில்லியனாக குறைந்து உள்ளது.

சர்வதேச விருது:

உலகளவில் அதிக உணவு உற்பத்திக்கு காரணமானவர்களை பாராட்டும் விதத்திலும், ஊக்குவிக்கும் விதத்திலும் சர்வதேச உணவு விருது, 1986 முதல் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு வென்ற, நார்மன் போர்லாக் என்ற அமெரிக்கரின் முயற்சியால் இவ்விருது உருவாக்கப்பட்டது. இவ்விருது பெறுபவருக்கு 13 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தியாவின் சார்பில் இதுவரை எம்.எஸ்.சுவாமிநாதன், வர்கீஸ் குரியன் உள்ளிட்ட ஆறு பேர் இவ்விருதை பெற்றுள்ளனர்.

விவசாயிகள் தங்கள் வறுமையினால் தற்கொலையை எதிர் கொண்டு வரும் சூழலில், இன்றும் நமக்கு கிடைத்த உணவை வீணடிக்கிறோம். அன்று முதல் இன்று வரை நம் மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகளையும் அவர்கள் படும் துயரத்தையும் எண்ணிப் பார்ப்பதில்லை. இனியாவது நமது நாட்டின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய விவசாயிகளை மதித்து, அவர்களால் கிடைக்கக்கூடிய உணவை வீணாக்காமல் அவர்களுக்கு நன்றி செலுத்துவோம்.