ஆவி இழந்த நீராவி முருகன்!
[wysija_form id=”1″]அந்த வீடியோவைப் பார்த்தால் அதிர்ந்து போவீர்கள்!
சாலையில் சாதாரணமாக நடந்து போய்க்கொண்டு இருந்தார் வேலம். மதியம் 3 மணி இருக்கும். யாரும் ஆள் நடமாட்டம் இல்லாத தெரு அது. அப்போது வேலத்தை நோக்கி ஒரு பைக் வருகிறது. அதில் இரண்டு பேர் இருக்கிறார்கள். வேலம் அருகில் வந்ததும் பைக் நிற்கிறது. பின்னால் உட்கார்ந்திருந்த ஆள் கத்தியுடன் இறங்குகிறார். ‘நகையை கழற்று’ என்றது அந்தக் குரல். கத்தியைப் பார்த்ததும், ‘என்னை விட்டுவிடு’ என்று கும்பிடுகிறார். ‘ஒழுங்கா செயினை கழற்றிக் கொடு… இல்லைன்னா கொன்னுடுவேன்’ என்று கத்தியை தூக்கியபடியே கழுத்துக்குப் பக்கமாகக் கொண்டு போகிறான். கழுத்தில் போட்டிருந்த செயினை கழற்றித் தருகிறார் வேலம். பைக் புறப்படுகிறது. கத்தி ஆசாமிகள் தலைமறைவு ஆகிறார்கள்.
சென்னை துரைப்பாக்கத்தில் பள்ளி ஆசிரியை வேலத்திடம் டிசம்பர் 19-ம் தேதி 14 பவுன் செயின் பறிக்கப்பட்ட சம்பவம்தான் இது. எதிர் வீட்டு மாடியில் இருந்து செல்போனில் வீடியோவாக எடுக்கிறார் ஒரு பெண். அந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப்பிலும் பரவியது. இதுபோன்ற செயின் பறிப்பு சம்பவங்கள் சென்னையில் சர்வசாதாரணம். போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் புகார் கொடுத்தாலே, ‘எழுதி அந்த டேபிள்ல வெச்சுட்டு போங்க’ என்றுதான் அலட்சியமாகச் சொல்வார்கள். ‘எதுக்குமா செயின் போட்டுட்டு போற?’ என்று அட்வைஸ் பண்ணும் கதாகாலட்சேப போலீஸ் பெருசுகளும் அதிகம்.
பட்டப்பகலில் இப்படி செயின் பறிப்பு நடக்கிறது என்று ‘வாட்ஸ் அப்’ வீடியோதான் போலீஸாரை ‘உணர்ச்சி’ வசப்பட வைத்தது. உயர் போலீஸ் அதிகாரி தூக்கம் இல்லாமல் தவித்தார். தனக்குக் கீழ் இருக்கும் அதிகாரியை அழைத்து, ‘இந்த திருடனைப் பிடிக்காமல் வேலைக்கு வராதே’ என்று சொல்லி அனுப்பி விட்டார். அலைந்தார், திரிந்தார். இந்த வீடியோவை தமிழகம் முழுக்க உள்ள அனைத்து ஸ்டேஷனுக்கும் அனுப்பினார்கள். எல்லா ஸ்டேஷன்களிலும் இந்த வீடியோ ஓடியது. அவனா? இவனா? என்று அலசி ஆராய்ந்து… கடைசியில் தூத்துக்குடி ஆசாமியுடன் முகவெட்டு செட் ஆனது. அமுக்கினார்கள். அவன் பெயர் ‘நீராவி’ முருகன். ‘நீராவி’ என்பது ஊர் பெயர்.
இவனுக்கு ஏற்கெனவே பல பராக்கிரமங்கள் உண்டு. தூத்துக்குடியில் மட்டும் 27 வழக்குகள் உள்ளதாம். ஆளை அமுக்கி சென்னைக்கு அழைத்து வரும்போது அவன் ஆளையும் காலையும் பாருங்கள். டிப் டாப் உடையில் விலை உயர்ந்த ஷூ அணிந்து ‘சம்பவ’ இடத்துக்கு ‘அவரை’ ராஜ மரியாதையுடன் அழைத்து வந்தது போலீஸ். நகை பறிகொடுத்த வேலத்தை பார்த்ததும் காலில் விழுந்து கும்பிட்டான் ‘நீராவி’ முருகன். அதற்காக மன்னித்துவிடவா முடியும்? கையில் ஓர் ஆள் சிக்கிவிட்டால் அதன்பிறகு ‘துணிச்சல்’ காட்டுவார்களே போலீஸ்? அடித்துத் துவைத்தார்கள்போலும்! இப்போது காலில், கையில் கட்டுப்போட்டு ‘களை’ இழந்து காணப்படுகிறான் ‘நீராவி’ முருகன். போலீஸைக் கேட்டால், ‘தப்பி ஓட முயற்சி, வழுக்கி விழுந்ததில் கையும் காலும் உடைந்து விட்டது’ என்கிறார்கள்.
குற்றவாளியைப் பிடித்தால் மொட்டை போடுவதாக சப்இன்ஸ்பெக்டர் கிருபாநிதி, ஏட்டு விஜயகுமார், போலீஸ்காரர் புஷ்பராஜ் ஆகியோர் வேண்டிக்கொண்டார்களாம். மொட்டையும் போட்டுவிட்டார்கள். (ஆதாரம்: படம்) இப்படி எல்லா செயின் பறிப்பு திருடர்களையும் பிடித்து எல்லா போலீஸும் மொட்டையுடன் அலைந்தால் மக்களுக்கு பெரிய நிம்மதி!
[wysija_form id=”1″]